29 அக்., 2008

கருத்துக்கள்-8: "எஃப்-எம் வானொலிகள்"

"எத்தனை வருஷமா லவ் பண்றீங்க?"
"ஏழு வருஷமா"
"அவ்வளவு வருஷமாவா... கேட்கவே பெருமையா இருக்கு... எப்போ கல்யாணம்?"
"அவங்களுக்கு ஏற்கனவே ஆயிருச்சு..."

இப்படி ஒரு உரையாடல் ஒரு நாளைக்கு பலமுறை பல்வேறு குரல்களில் பல்வேறு எஃப்-எம் வானொலிகளின் வழியே ஏதோ அன்றாட நிஜம்போல தமிழர்களின் செவியில் ஈயத்தைக் காய்ச்சி, வலி தெரியாமல் ஊற்றப்படும் கலாச்சார நிஜமாகி வருகிறது. நாள் பலன், நட்சத்திர பலன் தொடங்கி மூட நம்பிக்கைகளின் ஊற்றுக் கண்ணாகவும், 'செக்சை மனம் விட்டுப் பேசலாம்.. எஸ்.எம்.எஸ்., லவ் கவிதை, பாட்டை டெடிகேட் பண்ணலாம்'.. ஜாலியா லைஃப் கொண்டாடலாம்'... பீச், பார்க், நகைக்கடை என கலாச்சார சீரழிவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அவமானமாக நாம் எஃப்.எம். வானொலிகளைப் பார்க்கிறோம். கலை, பொழுதுபோக்கு எனும் பெயரில் நடைபெறும் இந்த அவமான பரிணாமம் அரசு வானொலிகளையும் விட்டுவைக்கவில்லை.

கோடிக்கணக்கான விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், அன்றாட உணவிற்கு அல்லல்களை வலியோடு தாங்குபவர்கள் குறித்த ஒரு அணுஅளவு அக்கறைகூட காட்டிக் கொள்ளாத இந்த அரைவேக்காட்டு நஞ்சு, நகர்ப்புற மத்திய வர்க்கத்தின் கிடைக்கும் நேரத்தையும் கொன்று, வாழ்வின் யதார்த்தத்தை விட்டு தள்ளிவைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். தினசரிகளில் வரும் கள்ளக்காதல் கொலை, கணவனுக்கு விஷம் வைத்துக் கொலை, குழந்தைகளுடன் மனைவி எரித்துக் கொலை, ஆசைக்கு இணங்க மறுத்த அக்கா கொலை, இத்யாதிகளுக்கு, விஷக்கிருமியான தொலைக்காட்சித் தொடர்களைவிட, இன்று இந்த எஃப்.எம். வானொலிகள் அதிகப்பங்கு வகிப்பது வலி ஏற்படுத்தும் உண்மையாகும். காதலர் தினம், 'ஃபிரெண்ட்ஷிப் டே', என சர்வதேச சந்தையின் அங்கமாயும், உள்ளூர் கலாசார சீர்கேட்டின் வினை ஊக்கியாகவும் செயல்படும் இந்த மக்கள் விரோத அபினி... 'நங்கநல்லூர் வழியாப் போகாதீங்க... அங்கே ஒரு போராட்டம் நடந்து கிட்டுருக்கு'' என்று நல்வழிப் படுத்துவதையும் பார்க்கிறபோது, அவை யாருக்கான வேலையை பார்க்கின்றன, அவற்றின் நோக்கம் பொழுதுபோக்குதானா எனச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

நாம் 'காலர் டியூன்' காலத்தில் வாழ்வது உண்மைதான். ஆனால் ஒரு புத்தகத்தைப் படிக்கவோ, பிரச்னைகளை சிந்தித்து சராசரி மனிதனின் அன்றாட வாழ்வியலை முன்னுக்கு கொண்டுவந்து ஒரு முற்போக்குச் சமூகத்தை, சமத்துவத்தை, மாமனிதர்கள் கனவைக் கண்ட யதார்த்தத்தை சாதிப்பதற்கோ எவ்விதத்திலும் இந்த ஃஎப்.எம். வானொலி சேவை உதவிடப் போவதில்லை என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் அவ்விதமான மனிதநேயச் சமூக உருவாக்கத்திற்கு எதிராகவே அவர்களது செயல்பாடுகள் அமைகின்றன என்பதையும் பார்க்கிறபோது, அவைகளுக்கு எதிராக நாம் களம் இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே படுகிறது - தமிழைக் கொன்று, கலாச்சாரத்தையும் கொன்று, அது தன் விளம்பரதாரர் உதவியோடு, தின்று கொழுத்து ஏப்பம் விடுவதற்குள்.

நன்றி: "கீலுங்க..கீலுங்க... கீத்துக்கிட்டே இருங்க?", தலையங்கம் (ஆசிரியர் குழு), புதிய புத்தகம் பேசுது, செப்டம்பர் 2008.

நெல்லையப்பன் கவிதைகள்-34: "அமாவாசைச் சந்திரன்"

தொப்பை இல்லா போலீஸ்
சொத்து இல்லா மந்திரி
அரியர் இல்லா மாணவன்
மீசை இல்லா தாதா
தண்ணி இல்லா பால்
வன்முறை இல்லா சினிமா
வசூல் இல்லா கட்சி
குழி இல்லா ரோடு
ஜாதி இல்லா அரசியல்
படபடப்பு இல்லா முதலிரவு
வரிகட்டும் வியாபாரி
ரேஷன் கடை எடை
நேரத்தில் வரும் ரயில்
தமிழ் பேசும் நடிகை
சிந்திக்க வைக்கும் சீரியல்
ஜி-எச் சுத்தம்
போட்ட பட்ஜெட்டில் புதுவீடு
அறிவித்த நேரத்தில்
கட்சிப் பொதுக்கூட்டம்
லாபம் தரும் இலக்கிய இதழ்
கவிஞர்களுக்குள் ஒற்றுமை.

நலக்குறிப்புகள்-18: "வில்வ இலைக்குடிநீர்"

ஒரு கைப்பிடி வில்வ இலையை ஒரு டம்ளர் நீரில் (௨00 மிலி) மாலையில் ஊற வைத்து பத்து மணி நேஅரம் ஊறியபின் அந்த நீரை (இல்லை வடிநீர்) வெறும் வயிற்றில் அருந்தி வரவேண்டும். (அருந்திய பின் இரண்டு மணி நேரம் வரை எதையும் சாப்பிடாமல் இருந்தால் நீர் நன்றாக வேலை செய்ய ஒரு வாய்ப்பு.) சுவைக்காகவோ, மணத்திாகவோ எதையும் சேர்க்கக் கூடாது.
நீங்கும் பிரச்னைகள்: மலச்சிக்கல் நீங்கும். அஜீரணம் போகும். வாயுத்தொல்லைகள் நீங்கும். அல்சர் பூரண குணம் கிடைக்கும். தொடர்ந்து பருகிவர, பெண்களுக்கு வெள்ளைபடுதல் பிரச்சனை தீரும். முடி உதிர்வதைத் தடுக்கும். கூந்தல் வளர்ச்சியைக் கொடுக்கும்.
நன்றி: எஸ்.கஜேந்திரன், செல் 9442669325 & 'இயற்கை மருத்துவம்', அக்டோபர் 2008, (தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு).

தாயுமானவர் பாடல்-1:

ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும் நாட்டமே
நாட்டத்துள் நிறைந்த வானமே
எனக்கு வந்து வந்தோங்கும் மார்க்கமே
மருளர் தாம் அறியா முதலே
முத்தி நல்வித்தே
முடிவிலா இன்பமே
செய்யும் தானமே
தவமே
நின்னை நான் நினைந்தேன்
தமியனேன் தனை மறப்பதற்கே.

25 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-33: "மின்சார வட்டி"

"ஆயிரம் ரூபா
ராத்திரி எட்டு மணிக்குள்ள
கரக்டா கட்டலேன்னு வையி,
மவனே, ஒம் பொண்டாட்டிய
ஒட்டிக்கினு வந்து விட்டுடு" -
அதிகாலை ஐந்து மணிக்கு
வசைபாடியவரை
வணங்கி நின்று,
நூறுரூபா பிடித்துக்கொண்டு,
அவர் கொடுத்த
தொள்ளாயிரம் ரூபாயில்,
முதலில் சூடான உயிர்த் திரவம்
டீக்கடையில் அருந்திவிட்டு,
தள்ளுவண்டியின் சக்கரங்களுக்கு
மூச்சு வாங்க காற்று அடித்து,
விடியுமுன்னே மார்க்கெட்டுக்கு ஓடி,
நான்கு கூடை ஆப்பிள்களை
பேரம்பேசி வாங்கி,
தெருத் தெருவாகக் கூவி விற்று
மொத்த வெயிலையும் தலையில் வாங்கி,
ஐம்பது பைசா இட்லி பத்தும்,
பிறகு கதம்ப சாதமும் சாப்பிட்டு,
ஏட்டையாவுக்கு ஆப்பிள் கொடுத்து,
இரவு ஏழு மணிக்கு விற்றுமுடித்து,
அவசரமாக ஆயிரம் ரூபாயை
முதாளியிடம் கட்டிவிட்டு,
வீடுநோக்கி நடந்தவனிடம் மிஞ்சியது:
இருபது சில்லரையும்,
அடிபட்ட ஆப்பிள்கள் நான்கும்.

23 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-28: "ஆயிரம் உண்டிங்கு ஜாதி" - சுஜாதா

ஞாயிற்றுக்கிழமைகளில் நான் தவறாமல் பார்ப்பது - ஹிந்து பத்திரிக்கையின் 'மேட்ரிமோனியல்' விளம்பரங்களை. எனக்குக் கல்யாண உத்தேசம் எதுவும் இல்லை. அது முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னேயே நிகழ்ந்து, சண்டை போட சப்ஜெக்ட் தீர்ந்துபோய், நானும் மனைவியும் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டோம்.

'ஹிந்து'வின் இந்தத் திருமணப் பக்கங்கள் நம் சமூகத்தின் உண்மையான குறிகாட்டி. இந்த நாட்டில், குறிப்பாகத் தென்னாட்டில் அத்தனை சாதிகளும் பத்திரமாக இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.

உதாரணம் - ஆர்.சி.வன்னியர், தெலுகு பிராடஸ்டன்ட், கிறிஸ்டியன் நாடார், ரோமன் கத்தோலிக், கள்ளர் முக்குலத்தோர், தமிழ் முஸ்லீம், சன்னி உருது, பலிஜா நாயுடு, கேரளைட் விஸ்வகர்மா, வன்னியகுல க்ஷத்ரியர், வடமா பரத்வாஜா, வடகலை தைத்திரிய காசியபம்!

"ஆயிரம் உண்டிங்கு ஜாதி - இது
ஞாயிறுதோறும் தவறாத சேதி" - என்று பாரதி இப்போது பாடியிருப்பார்.

இதை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்வதைவிட, இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள் தாம் முக்கியமாகப்படுகின்றன.

1. சாதி இல்லை என்ற கொள்கை வீட்டுக்கு வெளியே மற்றவர்களுக்கு.
2. தங்கள் குடும்பத்துக்கு வரும்போது மட்டும் சாதி பாராட்டுகின்றனர். இதற்குப் பல யதார்த்தமான காரணங்கள் இருக்கலாம். உணவுப் பழக்கங்கள், மொழி, பெறப்போகும் பிள்ளைகள் குழப்பம் இல்லாமல் வளர்வது.
3. பிராம்மணர்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கத்தினரும் சாதி பாராட்டுகின்றனர் - கல்யாணம் என்று வரும்போது.
4. 'கிரீன் கார்டு ஹோல்டர்" என்கிற புதிய சாதி உருவாகிக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு, மெடிக்கல் அட்மிஷன் - இவற்றுக்கு சாதி தேவைப்படுவது வேறு விஷயம். இவற்றை மீறித்தான் கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன. அதுவும், வேறு விஷயம். அதன் பின்னும் சாதிகள் பத்திரமாக இருப்பதுதான் செய்தி. உதாரணம் -
Mother Brahmin, Father Vanniyar, 26 - Poorattathy, Multinational company, Five figure salary, seeks graduate girl Brahmin or pure vegetarian.

இந்த விளம்பரத்தில் ஒரு நாவலுக்குரிய சமாசாரமே அடங்கியிருக்கிறது.

நன்றி: ஆனந்தவிகடன், 11.4.1999

கேள்வியும் பதிலும்-23:

கம்ப்யூட்டர் மூலம் மாப்பிள்ளை பார்க்க முடியுமா? (எல்.மகாலட்சுமி, மானாமதுரை)
ஒரு பழைய ஜோக் நினைவுக்கு வருகிறது. "அழகாக இருக்க வேண்டும். ஆனால் அதிக உயரமாக இருக்கக் கூடாது. நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். குளிர் பிரதேசத்தில் வாழத்தயாராக இருக்கவேண்டும். கூட்டத்தில் ஒருவராக ஒத்துப் போகவேண்டும். எனக்கு ஒரு ஜோடி தேடிக்கொடு" என்று கம்ப்யூட்டரிடம் விண்ணப்பித்தான் ஒரு இளைஞன்.
சில நிமிடங்கள் யோசித்த கம்ப்யூட்டர் கேட்டது: "டால்ஃபினை கல்யாணம் பண்ணிகொள்ளத் தயாரா?" (தமிழன்)
நன்றி: தமிழன் கேள்வி-பதில், குங்குமம், 9.4.1999.

எனக்குப் பிடித்த கவிதை-44: "நின்றுபோன கடிகாரம்" - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

நேற்றிரவு என்னுடைய கடிகாரம் நின்றுபோயிற்று.
களிம்பேறிய ஓர் இதயம்
இனி என் மணிக்கட்டில் துடிக்காது.

தங்கைக்குப் பிறக்க நிமிடம் கொடுத்ததும்
பாட்டிக்கு இறக்க வேலை குறித்ததும்
இந்தக் கடிகாரம்தான்.

ஜாதகத்தின் காரணமும்
வாழ்க்கையின் இலக்கணமும்
இந்தக் கடிகாரம்தான்.

தூங்குமுன் உற்றுக்கவனித்தால்
இந்தக் கடிகாரத்திலிருந்து
காதலியின் மூச்சிரைப்பைக் கேட்கலாம்.
குண்டுபட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்.

இருளிலும் மின்னும் பச்சை முட்களுக்கு
அயல்கிரகங்களுடனுள்ள தெளிவற்ற உறவை நினைந்து
வியந்திருக்கிறேன்.

டிக்...டிக்...டிக்...டிக்
அடிமைகள் கல்லுடைக்கும் சப்தம்
யாகக் குதிரைகளின் குளம்பொலி
திக்விஜர்களின் இரத்தம் படிந்த அமைதி மந்திரம்
தீர்க்கதரிசிகளின் தளர்ந்த நாடித்துடிப்பு.

டிக்...டிக்...டிக்...டிக்
பதில் வராத மழையில்
அகதிகள் காலடி ஓசை.
மரணத்தின் வழியே வெற்றியை நோக்கித்
தற்கொலைப்படையின் கனவுப் பயணம்
சரணடைந்த வாழ்க்கைக்கு
எதிரிப்படையின் காவல் தாளம்.

நேரமாகவில்லை.
நேரமாகவில்லை.

மெல்லிய முட்கள் ஒன்று சேரும்போது
மக்களைத் தூக்கிலிடத் தீர்ப்பளித்த
நீதிமன்றம் கலைகிறது.

நான் இனி காலத்தின் வாதியோ,
பிரதிவாதியோ இல்லை.
நேற்றிரவு என்னுடைய கடிகாரம்
நின்று போயிற்று.

- மூலம்: மலையாளம்
- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
- தமிழில்: சுகுமாரன்

நெல்லையப்பன் கவிதைகள்-32: "தவறும் நீதி"

வாரம் என்றால் ஏழு நாள்
மாதம் என்றால் அதிக பட்சம்
முப்பத்தியொரு நாள்.
வயிற்றில் குழந்தை என்றால்
இருநூற்றெழுபது நாள்.
கோர்ட்டில் வழக்கேன்றால்
எத்தனை நாள்?

அறுப்பு முடித்தால்
கடன் அடைக்கலாம்.
வீட்டை விற்றால்
மகள் திருமணம் நடத்தலாம்.
மாட்டை விற்றால்
பேறுகாலம் பார்க்கலாம்.
எவற்றையெல்லாம் விற்றால்
வழக்கை முடிக்கலாம்?

தாமதமாக வரும் நீதி
தவறிய நீதிதானே!
வழக்காட
இல்லை பணம்
என்றால்
தோற்றுப்போகுமா நீதி?

எத்தனை காலியிடங்கள்
நீதிபதி பதவிகளுக்கு!
நீதிபதி நியமனங்களை
விரைவு படுத்தவேண்டி
எந்தக் கோர்ட்டில்
வழக்குத் தொடுப்பது?
அந்த வழக்கும்
எப்போது முடியும்?

நலக்குறிப்புகள்-17: "அருகம்புல்லின் சிறப்புகள்" - ச.வெ.சுப்பிரமணியன்

இயற்கை வாழ்வியல் அல்லது உணவு மருத்துவத்தில் அருகம்புல்சாறு முதலிடம் பெறுகிறது. இதன் சிறப்பும் பண்பும் பலவாகும். அருகம்புல்லில் பச்சையம் நிறைந்துள்ளது. காரத்தன்மை உடையது. உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் இருக்கின்றன. உடல்தளர்ச்சியை நீக்கி, கட்டுமாறா உடலுறுதியைத் தரவல்லது. உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்குகிறது.

உடற்பிணிகள் அனைத்துக்கும் முதற் காரணமான குருதியின் அமிலத்தன்மையை சீர்செய்து, குடற்புண்களை குணப்படுத்துகிறது. ஆக்கச்சிதைவு மாற்றத்தை சீர்செய்து, நரம்புத் தளர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. இரத்தத்தைக் கூடுதலாக்கி, இரத்தச் சோகையை நீக்குகிறது. இதயம், நுரையீரல் போன்றவற்றின் சீரான இயக்கத்திற்குத் துணைபுரிகிறது. கல்லீரலில் இறுக்கம் உண்டாகி கற்கள் படிவதைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.

சிறுநீரகத்தின் குறைபாட்டினை நீக்கி அது சீராகப் பணிபுரிய உதவுகிறது. பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி, பற்களை உறுதிப் படுத்துகிறது. பற்களை வெண்மையாக்கி, வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. பிள்ளைப்பேறு காலத்தில் தாய்மார்களுக்கு பால்சுரப்பை உண்டுபண்ணுகிறது. நச்சுப் பொருட்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கிறது. இதில் இன்சுலின் நிறைந்துள்ளதால் நீரழிவுக்கு நன்மருந்தாகும். நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தை இது சீர்படுத்துவத்தின் மூலம், ஆஸ்துமாவிலிருந்து நலம்பெற உதவுகிறது.

உடலின் வெக்கையை நீக்க உதவும். உணவுப் பாதையில் நடைபெறும் தொடர் அலை அசைவை சீர்செய்து, மலச்சிக்கலை நீக்கி, உடல்நல உயர்வினை நல்குகிறது. தோல் தொடர்பான பிணிகளுக்கு சிறந்த பயனளிக்கிறது.

அருகம்புல் சாற்றினை காலை வெறும் வயிற்றில் உணவாகக் கொள்ளலாம். உணவைக்குடி, நீரை உன் என்ற சொற்றொடரை மனதில் கொண்டு, நன்கு சுவைத்து, சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலக்கும்படி வாயில் ஊறவைத்து உண்ணவேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்கு நீரின்றி பிற உணவுகளைக் கொள்ளலாகாது.

நன்றி: திரு ச.வெ.சுப்பிரமணியன், அறிக அறிவியல், ஜனவரி 1995.

ஹைகூ-12:

தாத்தா விட்டுப்போனது
இது ஒன்றுதான்
என் பெயர்.

- நன்றி: ராஜமுருகுபாண்டியன்

சுற்றுச்சூழல்: "வீட்டுக்கு நாலு மரம் நடுங்கள்"

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், ஏன் நண்பர்களுக்கும்கூட கைமேல் பலன் கிடைக்கிற காரியம் ஒன்று செய்ய விரும்பினீர்களானால் - வீட்டைச்சுற்றி நாலு மரம் நடுங்கள்.

மரம் நடுவதினால் எண்ணற்ற பயன்கள் உண்டு. ஒரு மரம் மனிதர்களும், விலங்குகளும் சுவாசிக்க உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) உற்பத்தி செய்கிறது. மண் அரிப்பைத் தடுக்கிறது. பறவைகளுக்கும், அணில்களுக்கும் இருப்பிடமளிக்கிறது. நீரைத் தூய்மை செய்கிறது. மழை நீரை நிலத்திலிருந்து ஈர்த்து, ஆவியாக்கி அனுப்பி மீண்டும் மழை பெய்விக்க உதவுகிறது. காற்றினால் ஏஅற்படும் சேதத்தைத் தடுக்கிறது. நிழல் தருகிறது. கோட்டை வகைகள், பழவகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை அளிக்கிறது.

இப்படி, எல்லாப் பயன்களையும் கணக்கில் வைத்துப் பார்த்தால், ஒரு மரம், தான் வாழும் ஐம்பது ஆண்டுகளில் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயன்களைத் தருகிறது.

வீட்டுக்கு நாலு மரம் நடுங்கள். இது உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சூழல் அழகுபெறுவதோடு மதிப்பு மிக்கதாகவும் ஆக்கும்.

மரங்கள் ஒன்றோடு ஒன்று சைகைகளின் மூலம் பேசிக் கொள்கின்றனவாம். ஒரு சில மரங்கள் புழுக்களால் தாக்கப்படும்போது, அவை அருகிலுள்ள மாற்ற மரங்களுக்கு இரசாயன முறையில் எச்சரிக்கை செய்கின்றனவாம். அருகிலுள்ள மரங்களின் இலைகளுக்கு 'தெனின்' என்னும் இரசாயனப் பொருளை இன்னும் அதிகமாக அனுப்பி, புழுக்கள் இலைகளை ஜீரணிக்க முடியாதபடி செய்துவிடுகின்றனவாம்.

மரங்களை நடுவதினால் ஓரிடத்தின் பருவநிளையே மிகக் குளிர்ச்சி அடைவதுண்டு. மரங்களை வெட்டுவதினால் வெப்பம் அதிகரிக்கின்றது.

மரங்களை நண்பர்களாகக் கருதவேண்டும். வெட்டக்கூடாது. வளர்க்க வேண்டும். வீட்டைச்சுற்றி மரம் வளர்த்தால் கோடையில் செயற்கை குளிர்சாதனங்களுக்கு வீணாகப் பணம் அழவேண்டிய அவசியம் ஏற்படாது.
-- நன்றி: "நல்வழி", மாத இதழ்.

என் கவிதை-6: "கூண்டுக்கிளியும், கூண்டுப்புலியும்"

கூண்டுக்கிளிக்கும்
கூண்டுப்புலிக்கும்
கல்யாணம் -
பெரியவர்களால்
நிச்சயிக்கப்பட்ட
கல்யாணம்.
ஆரம்ப முதலே
கிளிக்கு
புலியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
புலிக்கும்
கிளியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
கிளி, புலியைத்
தேர்ந்தெடுத்த
வார்த்தைகளால்
வறுத்தெடுக்க,
புலி
ஊரே அதிரும் வண்ணம்
உறும,
யார் வெல்வது?
சந்தேகமென்ன,
கிளிதான்!
கூண்டுப்புளிக்கு
யார் அஞ்சுவர்?
புலி மண்டியிட்டு
முன்னங்கால்களால்
காதைப் பொத்தி,
கண்ணை மூடி,
சாய்ந்தே விட்டது.

22 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-31: "துண்டு"

உழைப்பவனுக்கு முண்டாசு
சுமப்பவனுக்கு சும்மாடு
மலையாள மங்கைக்கு மாராப்பு
அரசியல் அன்பர்க்கு தோள(ழ)ன்.

பாகவதருக்கு அங்கவஸ்திரம்
மேடையில் பொன்னாடை
பிடிபட்ட திருடனுக்கு கைவிலங்கு
வியர்த்துக் களைத்தவனுக்கு விசிறி.

வெயிலில் நடப்பவனுக்குக் குடை
துயில்பவனுக்குத் தலையணை
நழுவ நினைப்பவனுக்குத் திரை
இளைப்பாருபவனுக்கு விரிப்பு.

இல்லாதவனுக்கு அதுவே வேட்டி
குளிரில் நடுங்குபவனுக்குப் போர்வை
குளிக்கும்போது பலருக்குக் கோவணம்
மீன்பிடிக்கும் சிலருக்கு வலை

வல்லவன் கைகளில் ஆயுதம்
பணிவைக்க் காட்டும் இடையணி
பசியடங்கக் கட்டும் ஈரத்துணி
பட்ஜெட்டில் இருக்கும் இடைவெளி

நிறமும், கரையும், நீளமும்
இனத்தை அடையாளம் காட்டும் சின்னம்,
இத்தனூண்டு துண்டிற்கு
இத்தனை பரிமானங்களா!

துண்டுபோட்டு தாண்டிச் சொல்கிறேன்:
தொழில் துண்டுபோட்டு ஏய்ப்பவர்களை,
கழுத்தில் துண்டைப்போட்டு, மக்கள்
கேள்வி கேட்கும் காலம் வரும்!

20 அக்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-43: "பந்தயம்"

நடக்கக் கற்று
நாலடி வைப்பதற்குள்
'ஓடு!' என்றார்கள்.
ஓடலானேன் -
கைதட்டல்கள், வாழ்த்துக்கூச்சல்கள்
வேகம், வேகம், இன்னும் வேகம்
அன்னை மடியும்
காதல் ஒத்தடமும்
இளமைக் கூத்தும்
ஓட்டத்தினூடே ஓடிமறைந்தன.
ஓடும்போதே கல்யாணம் பண்ணி
கடமைகள் முடித்து
குழந்தைகள் பெற்று
குடும்பம் சுமந்து -
அடைந்தாள் சிரித்து
இழந்தால் அழுது
பக்தியில் நனைந்து
பயத்தில் உறைந்து
நரைக்க, நரைக்க
நாட்கள் பறக்க
இறைக்க, இறைக்க
ஓடிக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் எனக்கு
உண்மை புரிந்தது -
பந்தயம் என்றோ
முடிந்து போனது
நான் வெறும்
பழக்க தோஷத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்!
- தஞ்சாவூர்க் கவிராயர்
நன்றி: கல்கி, டிசம்பர் 28, 1997.

பாரதி கவிதைகள்-11:

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றுப் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியி னுள்ளே உயிரெலாம் நான்.

கம்பனி சைத்த கவியெலாம் நான்
காருநர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொயையிருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரக் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினான் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டபல சக்திக் கணமெலாம் நான்
காரண மாகிக்க கதித்துனோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருட்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதியே நான்.

இயற்கை உணவுக் குறிப்பு--2: "தக்காளி தயிர் பச்சடி"

தக்காளி மிக மலிவாகக் கிடைக்கும் காலத்திற்கேற்ற எளிய இயற்கை உணவு இது. இதைத் தயாரிக்கத் தேவையான பொருட்கள் : நான்கு தக்காளி, மிளகு சில, அரை கப் தேங்காய்த் துருவல், இரண்டு கப் தயிர், கொத்தமல்லி இல்லை, உப்பு.

தக்காளியை நன்றாக அரைக்கவும். அத்துடன் போடி செய்த மிளகு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லி இல்லை இவை அனைத்தையும் நைசாக அரைக்கவும். இந்தக் கலவையை அப்படியே தயிரில் கலக்கவும். தக்காளிப் பச்சடி தயார்.

கருத்துக்கள்-7: "புத்தகமும் மனிதனும்" - பழநிபாரதி

ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது ஒரு விலக்கு ஏற்றப்படுகிறது. ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு கதவு திறக்கப்படுகிறது. புத்தகம் தமிழ்ச்சொல்தான் என்கிறார் பாவாணர் என்றாலும், அதற்கு 'நூல்' என்று பெயர் வைத்த நுண்ணறிவுள்ள நம் முன்னவனை வணங்க வேண்டும். நூல் நம்மோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் உயரத்தையும், அகலத்தையும் நூல்தான் அளந்திருக்கிறது. இன்றைக்கும் காட்டப்படும் சுவர்களின் நேர்மட்டம் பார்க்க தொழிலாளர்களின் கையில் நூல்மட்டம் இருக்கிறது. நூல்தான் ஒரு காகிதத்தை பட்டமாக்கி வானத்தில் ஏற்றிவிட்டு மண்ணுக்கும் வின்னுக்குமான தொடர்பு அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. நூல்தான் எந்த ஒன்றையும் கட்டிவைக்கிறது. நூல்தான் கிழிசல்களைத் தைக்கிறது.

நூகப்படும் நூல் நிகழ்த்துகிற இந்த எல்லாச் செயல்களையும், மனிதனால் கற்கப்படும் நூலும், அவனுக்குள் நிகழ்த்துகிறது. அதனால்தான் 'புத்தகத்தைத் தொடுபவன் அதன் மூலம் மனிதனைத் டுபவனாகிறான்' என்கிறான் வால்ட் விட்மன்.

நன்றி: 'ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனிதன், ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்" - பழநிபாரதி, நியூ செஞ்சுரியின் "உங்கள் நூலகம்", ஜூலை-ஆகஸ்ட் 2006.

நெல்லையப்பன் கவிதைகள்-30: "புகைவண்டி"

கரியிலிருந்து
டீசலுக்கு மாறி
புகையில்லா வண்டியானது
புகை வண்டி.

அன்று
கோத்ராவில்
மறுபடியும்
புகைவண்டியானது.

பிறிதொரு முறை
பாகிஸ்தான் போகும் வழியில்
வெடித்துச் சிதறியபோது
புகைவண்டியானது.

முன்பு
தேசப் பிரிவினையின்
சிதறிய ரத்தத்தில்
கறை வண்டியானது.

மதங்களுக்கிடையே
புகையாமலிருந்தால்
தொடர்வண்டி எப்பொழுதும்
புகையா வண்டியாய்த் தொடரும்.

நலக்குறிப்புகள்-16: "நலமுடன் வாழ..."

ஒருவர் ஆரோக்கிய வாழ்வு வாழ இயற்கையோடு இயைந்து வாழவேண்டும். உணவின் அளவு பற்றி ஒவ்வொருவருக்கும் அக்கறை வேண்டும். அளவாக உண்ணுதலிலேயே ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. சோறு மிகக் குறைவாக இருந்தால் போதும். காய்கனிகளைத்தான் நிறைய உண்ணவேண்டும்.
நண்றாக மென்று உண்ணவேண்டும். எவ்வளவு சுவையானதாக இருப்பினும், ஒருவர் தனது தேவைதான் என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உணவுக்குப் பின்னால் முக்கியத்துவம் பெறுவது உடற்பயிற்சி.
பச்சைக்காய்கறிகள், பழங்கள் மிகுதியாய் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். எந்த உணவானாலும் அளவாக உண்ணப் பழகுங்கள். உணவு உண்ணப் போதுமான நேரம் கொடுங்கள். நீங்கள் எப்போதும் இளமையாகவும், நலமுடனும் வாழ முடியும்.
- டாக்டர் சத்தியவான்
நன்றி: டாக்டர் சத்தியவான் & 'இயற்கை மருத்துவம்', மாத இதழ், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.

ஹைகூ-11:

அறியாமையை
சேகரித்தோம்
வாக்குப்பெட்டிகள்.
- ராஜமுருகுபாண்டியன்
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன் அவர்கள்

இன்றைய சிந்தனைக்கு-27:

சமுதாயத் தொண்டில் ஆன்மீகக் கண்ணோட்டம் இல்லையேல் அது பயனற்றுப்போகும். - காந்திஜி

என் கவிதை-5: "பட்டியல்"

வல்லபை கணபதி
வாக்(கு) தேவி
வால்ட் விட்மன்
வாகையடி அம்மன்
துணை.

அப்பாவிப் பையன்
அசட்டுப் பையன்
கற்க கற்க
கள்ளம் கற்க
அங்கே போ
இங்கே போ
எங்கேயும் போ
கால் போனபடி.

சுற்று, சுற்று
பொறுக்கு, பொறுக்கு
கிடைத்ததெல்லாம்
பொறுக்கு.
நல்லது, கெட்டது
கண்டது, கழியது
குப்பை, குப்பை
ஒரு வண்டிக்குப்பை
இல்லையில்லை
பல வண்டிக்குப்பை!

பள்ளியில் கொஞ்சம்
பாதியில் கொஞ்சம்
ஆட்டம், பாட்டம்
திருதிரு முழி
திருதிரு முழி
படி, படி, படி, படி
புத்தகம், புத்தகம்
புத்தகம், புத்தகம்
சினிமா, சினிமா
சாப்பாடு, சாப்பாடு

அந்த ஊர்
இந்த ஊர்
எத்தனையூர்!

புத்தக மூட்டை
புழுகு மூட்டை
அழுக்கு மூட்டை
அறிந்த மூட்டை
அறியாத மூட்டை
குழப்ப மூட்டை
எத்தனை மூட்டைகள்!

தூக்கு, தூக்கு
ஓடு, ஓடு
வேலை, வேலை
ஐயோ வேலை!

தம்பி படி
தங்கை படி
கல்யாணங்கள்
கச்சேரிகள்
கடலை மிட்டாய்கள்

சோதனைகள்
பரிசோதனைகள்
மன்றங்கள்
மனிதர்கள்
மருத்துவங்கள்
மனக்குழப்பங்கள்
உலகங்கள்
உதைகள்
ஊர் சுற்றும் வாய்ப்புக்கள்
திட்டங்கள்
தீட்டல்கள்
அனுபவங்கள்
ஆச்சரியங்கள்
கற்றல்கள்
கதறல்கள்
எத்தனை படலங்கள்!

கற்ற படலம்
கனவுப் படலம்
காய்ந்த படலம்
விற்ற படலம்
வேஷப் படலம்
வேதனைப் படலம்
நட்புப் படலம்
நாடகப் படலம்
புத்தகப் படலம்
புரியாத படலம்
குடும்பப் படலம்
குசேலப் படலம்
குழப்பப் படலம்
தனிமைப் படலம்
தடுமாறும் படலம்

நடுவில் -
நீ யார் பெண்ணே?
சரி, சரி, வா, வா.
நட, நட
வேகமாய் நட
கட்டில், தொட்டில்
சுட்டிப்பொண்ணு
குட்டிப்பையன்
கொஞ்சல்கள்
குலாவல்கள்
போதும், போதும்
கடன்கள்
கவலைகள்
கழுத்தறுப்புகள்
காயங்கள்
இங்கே கடன்
அங்கே கடன்
ஒளிஞ்சுக்கோ
ஒளிஞ்சுக்கோ
புத்தகத்தில்
ஒளிஞ்சுக்கோ

படி, படி
நிறையப் படி
கதைகள்
கவிதைகள்
கட்டுரைகள்
காவியங்கள்
அறிவுத்தாகம்
ஆங்கிலமோகம்
புத்தகப் புழு
புத்தகப் பைத்தியம்
எழுது, எழுது
சில்வர் ஃபிஷ்
டாக்டர், டாக்டர்

நண்பர்கள்
நல்லவர்கள்
நயவஞ்சகர்கள்
நாடகங்கள்
நாட்குறிப்புகள்
தேடல்கள்
தேவைகள்
ஏக்கங்கள்
தூக்கங்கள்
பாராட்டுக்கள்
பஞ்சப்பாட்டுக்கள்
ஒட்டல்கள்
உரசல்கள்
மேலே போ
மேலே போ
நோய்கள், நொடிகள்
மருந்துகள், மாயங்கள்
மக்கு, மக்கு
முடி கொட்டுது
மீசை வெளுக்குது
அப்பா டாட்டா
அம்மா நோட்டா?

நீண்ட பயணம்
நெடிய பயணம்
கடவுளைத் தேடு
காசைத் தேடு
நட, நட
வேகமாய் நட
வாங்கல், விற்கல்
வாட்டல், வதங்கல்
வீடு, வாஹனம்

விளையாட்டுப் பொம்மைகள்

தேடு, தேடு
மாப்பிள்ளை தேடு
போய் வா பெண்ணே
போய்வா!

படிடா பையா படி!
பிடிடா வேலை பிடி!

வெள்ளைத் தாள்
வெறித்துப் பார்
கிறுக்கு, கிறுக்கு
முடிந்தவரை கிறுக்கு
அப்புறம் என்ன?
கத்திரிக்காய் காய்க்க
கதை முடிய
கையசைத்து
கடையை மூடிப்
போய் வா!

18 அக்., 2008

இன்றைய சிந்தனைக்கு-26: "கொடுப்பதுதான் வாழ்வு"

* உன் நண்பனுக்கு தோள் கொடு.
* உன் பகைவனுக்கு மன்னிப்பைக் கொடு.
* உன் தலைவனுக்கு நேர்மையைக் கொடு.
* உன் பெற்றோருக்கு பெருமையைக் கொடு.
* உன் சுற்றத்தார்க்கு அன்பைக் கொடு.
* உன் குழந்தைக்கு முன்மாதிரியைக் கொடு.
* உன் மனிதத்தன்மைக்கு உழைப்பைக் கொடு.
* உன் கடவுளுக்கு உன் வாழ்க்கையைக் கொடு.
- மா.லட்சுமிப்பிரியா, பதினோராம் வகுப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

இன்று ஒரு தகவல்-13: "கல்லூரிகளில் இரண்டு லட்சம் கோர்ஸ்கள்"

உலகம் முழுவதும் உள்ள சுமார் பத்தாயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இரண்டு லட்சம் கோர்ஸ்களைப் பற்றிய தகவல்களை அணுக வழிவகை செய்கிறது "ஸ்டடிப்லேஸஸ்.காம்" (http://www.studyplaces.com) என்ற போர்ட்டல். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்குகிறது. நம்பகமான தகவல்களுடன், ஆலோசனையும் வழங்குகிறது.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008. (அறிவியல் ஆயிரம்).

ஹைகூ-10:

தலையில் வழுக்கை
முகத்தில் கிருதா
இடம் மற்ற முடியுமா?

- எம்.ஜி.கன்னியப்பன்

நன்றி: எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.

நெல்லையப்பன் கவிதைகள்-29: "முதலும், முடிவும்"

வியாபாரம் சரியில்லையென
ஒன்றுவிட்ட சித்தப்பா பையன்
மாற்றியமைத்தான் வாசலை;
தொட்டி வைத்தான் மூலையில்;
திசை மாற்றினான் நாற்காலியை.
ஒரு எழுத்தைச் சேர்த்தான் பெயரில்
கையெழுத்தைப்போட்டான் தமிழில்.
தொட்டியில் விட்டான் சீன மீன்களை.
வாசலில் வைத்தான் சிரிக்கும் புத்தரை.
ஆண்டுகள் இரண்டு முடிந்தபின்,
செல்வத்தில் மிதந்த தம்பியை
எப்படி இந்த மாற்றமெனக் கேட்க,
வியாபாரத்தை இழுத்து மூடி
வெகுநாளாச்சு என்றவன்
நீட்டிய விசிட்டிங் கார்டு
"வாஸ்து நிபுணர்" என்றது.

அனுபவக் குறிப்புகள்-3: "உடல் எடை குறைந்தது"

என் வயது முப்பத்துநான்கு. நான்கு மாதங்களுக்கு முன்பு என் எடை 88 கிலோ. எடையைக் குறைப்பதற்காக இயற்கை உணவிற்கு மாறினேன். காலையில் உண்பதில்லை. மதியம் முற்றிய தேங்காய் ஒன்றும், இரவு ஏழு மணிக்குள் சுமார் பதினைந்து வாழைப்பழங்களும் சாப்பிட்டேன். தீபாவளி, பொங்கல் நாட்களில் மட்டும் சமைத்த உணவு சாப்பிட்டேன். இப்போது என் எடை 55 கிலோ. - திரு.எம்.பாபு, கும்பகோணம்.
நன்றி: "இயற்கை நாதம்", இயற்கை நல மாத இதழ், பிப்ரவரி 2005. ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு.


17 அக்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-28: "மண்ணின் மைந்தர்கள்"

அவரைத் தாக்கரே,
இவரைத் தாக்கரே -
மும்பை மாநகர
மண்ணின் மைந்தர்காள்!
உங்கள் தினவெடுக்கும்
தோள் வலிமை
வடமாநிலத்து
கோதுமை தந்தது.

வானளாவ உயர்ந்த
வலிமையான கட்டிடத்தில்
தெளிக்கப்பட்டிருக்கிறது
தென்னிந்திய வியர்வை!

மும்பைவரும் லாரிகள்
முடக்கப்பட்டால் -
சாப்பிட உணவின்றி
மராட்டியன் மராட்டியனை
சாப்பிடவேண்டியதுதான்!

மண்ணின் மைந்தர்கள்
மறந்துவிட்ட ஒரு விஷயம்,
மராட்டியம் இருப்பது
இந்தியாவில் என்பதை.

இந்தியனாய் இல்லாமல்
மண்ணின் மைந்தனாய்
மாறிப்போனவர்களே!
எப்போது மனிதனாக
மாறப்போகிறீர்கள்?

சித்தர் பாடல்கள்-३:

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என்கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!
- அழுகணிச் சித்தர் பாடல்

16 அக்., 2008

இன்று ஒரு தகவல்-12: "இன்று கை கழுவும் தினம்"

இன்று சர்வதேச கை கழுவும் தினம். இதையொட்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்ற ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு கட்டளைகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது:
1. பள்ளியில் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க மாணவர்கள் அடங்கிய குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அடுத்த ஆண்டிற்கான சுகாதாரச் செயல்களை திட்டமிட ஒரு சிறப்புச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
3. பள்ளி அறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்யவேண்டும்.
4. மதிய உணவுக்குமுன் அனைவரும் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
5. திறந்த வெளியில் மலம் கழிக்க மாட்டோம், கழிவறையை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.
6. சாப்பிடுவதற்கு முன்பும், மலம் கழித்த பின்னும் கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
7. சோப்பைப் பயன்படுத்திக் கைகளைக் கழுவுவது மற்றும் மலம் கழிக்க கழிவறைகளைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். சுத்தமான கைகளே ஆரோக்கியத்தின் அடையாளம் என்ற விழிப்புணர்வுக் கையேடு யுனிசெப் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் இதைப் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தவேண்டும்.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 16, 2008.

நெல்லையப்பன் கவிதைகள்-27: "வாக்காளப் பெருமக்கள்"

அதைத் தருகிறேன்
இதைத் தருகிறேன்
ஓட்டுப்போடென்று
அனைத்து வேட்பாளர்களும்
வாக்களித்துவிட்டு,
ஒட்டுப்போடுபவனைப் பார்த்து
"வாக்காளன்" என்பது
என்ன நியாயம்?

அவர்களெல்லாம்,
தவறுவதற்காகவே
வாக்குறுதிகளைத்
தருவதினாலே,
மக்களை வாக்காளர்களென்று
ஏமாற்றுகிறார்களா?

ஓட்டுப்போடும்
ஒருநாள்
தலைவர்கள்
தலையெழுத்தை
தாங்களே எழுதட்டும்
என வாய்ப்புக் கொடுத்தாலும்
தப்புப் தப்பாய்
எழுதித் தவிப்பவர்கள்

தானே தன் தலையில்
மண்ணை வாரிப்போட்டு,
தலை சொரிந்துகொள்ள
எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளியை
தேர்ந்தெடுப்பவர்கள்;
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏய்ப்பவர்களுக்கு என்ன குறை?

இன்றைய சிந்தனைக்கு-25:

கொடிய விஷத்தைக்கூட ஒருவன் உள்ள உறுதியோடு பொருட்படுத்தாதிருந்தால், அவ்விஷம் சக்தியற்றதாகிவிடும். மனதின் வலிமையை உணர்ந்துகொண்டவனால் சாதிக்க இயலாத காரியம் எதுவுமில்லை. - சுவாமி விவேகானந்தர்.

நன்றி: தினமலர், மதுரை (ஆன்மிகம் அறிவோமா)

ஹைகூ-9:

மாமூலாக வந்து போகிறது
தண்ணீர் லாரி
போலீஸ் காலனியில்.
- மு.முருகேஷ்
நன்றி: திரு.மு.முருகேஷ் & விகடன் தீபாவளி மலர் 2005.

15 அக்., 2008

கேள்வியும் பதிலும்-22:

உண்மையான துறவி யார்? (பா.அச்சுதன், வயலூர்)
அரசியலில் ஊடுறுவாத, ஆடம்பர வாழ்க்கை வாழாத, கொழுத்த உடலைக் கொண்டிராத, மதஉணர்வுகளைத் தூண்டிவிடாதமக்களோடு மக்களாகக் கலந்து வாழும், தன்னையும் ஒரு கடவுளாக எண்ணிக்கொள்ளாத எளிய மனிதர். (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008.

இன்று ஒரு தகவல்-11: "சென்னையில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி"

மத்திய மாநில அரசுகளின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறைகள் இணைந்து சென்னையில் நடத்திய தாய் சேய் நலக் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி அவர்கள் பேசியதிலிருந்து:

* சென்னையில், அரசு சார்பில் ஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படும்.
* மாவட்டம்தோறும் ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் தொடங்கப்படும்.
* மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, ஒரு முன்மாதிரிக் கல்லூரியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* வரும் ஆண்டிலிருந்து திருமங்கலம் கல்லூரியில் முதுகலைப் படிப்பு தொடங்கப்படும்.

தமிழக அரசின் மக்கள் நலவாழ்வுத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் பேசியது:
* இந்திய அரசொடயும் இணைந்து மாநில அளவில் தாய்-சேய் நல இயக்கத்தைத் துவக்கியுள்ளோம்.
* பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விளம்பரப் பிரதிகள், புத்தகங்கள், கருத்துரைகள் மற்றும் விளம்பரக் குறும்படங்களை ஹோமியோபதி மருத்துவ தாய்-சேய் நல இயக்கம் வெளியிட்டுள்ளது.
* ஹோமியோபதி மருத்துவத்தின் தனித்தன்மையை மக்கள் அறிய முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

இன்றைய சிந்தனைக்கு-24:

நமக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் நமக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன. அதனால் எந்த உதவியையும் நீங்கள் பிறரிடத்தில் எதிர்பார்க்கத் தேவையில்லை. - சுவாமி விவேகானந்தர்.
நன்றி: தினமலர், மதுரை, (ஆன்மிகம் அறிவோமா)

நெல்லையப்பன் கவிதைகள்-26: "விடியல்"

மாலையா
மலர்ச்சரமா
மலர் வளையமா
அர்ச்சனை உதிரியா
உதிரும் சருகா -
சேருமிடம்
எதுவானாலும்
மலரின் காத்திருத்தல்
ஓரிரு நாட்களே!
மலரினும் மெல்லிய
மங்கையர்க்கு?

மரணத்தைப் போலவே
மணநாளும் தெரியாமல்
எத்தனை நாள் காத்திருக்க?
முதலாவது நிச்சயம் வரும்
என்றாவது ஒரு நாள்.
இரண்டாவது
வருமா, வராதா?

இத்தனை வயதிற்குள்
காத்திருக்கும் கன்னியர்க்கு
மணம் முடிக்க வேண்டுமென
அவசரச் சட்டம் வராதா?
அரசே நடத்த முடியாதா?

அவசரம் எனக்கில்லை,
இளைய மகள் நான்.
அக்காக்கள் இருவர்
அவர்களுக்கு விடியட்டும்!

14 அக்., 2008

சித்தர் பாடல்கள்-2:

கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்த நமன் என் கண்ணம்மா!
குடியோடிப் போகானோ!
- அழுகணிச் சித்தர்

இயற்கை உணவுக் குறிப்பு-1: "இயற்கை இட்லி"

அவலை ரவா போல் உடைத்து, இளநீர் அல்லது கோதுமைப் புல் சாறு கலந்து, கெட்டியாகப் பிசைந்து, இட்லி தட்டில் தட்டி வைக்க வேண்டும். இருபது நிமிடத்தில் இட்லி வடிவத்தில் இருக்கும்; வேக வைக்கவேண்டியதில்லை.
நன்றி: இயற்கை நாதம், மாத இதழ், செப்டம்பர் 2008. (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு).

நெல்லையப்பன் கவிதைகள்-25: "மகளிர் மட்டும்"

மகளிர் பள்ளி
மகளிர் கல்லூரி
மகளிர் மட்டும் பஸ்
மகளிர் விடுதி
என்றெல்லாம் பெண்களைத்
தனிமைப்படுத்தி,
தயார்ப்படுத்தி,
மணமுடித்து வைக்க -

ஆணைப் புரியாமல்
பெண்ணும்,
பெண்ணை பிரமிப்பாகப்
பார்க்கும் ஆணும்,
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாய்,
சிக்கலுடன்
தொடங்கும் வாழ்க்கை!

பெண்களை
இயல்பாய் பார்க்க ஆணும்,
ஆண்களுடன்
நட்புடன் பழக பெண்ணும்,
வாய்ப்பற்று இருப்பது
சிக்கல்களின் தொடக்கம்.

விலங்குகளும், பறவைகளும்
பால்பேதம் பார்ப்பதில்லை!
குழந்தைகளாக வளர்க்காமல்,
ஆண், பெண் என்று
ஆரம்பம் முதல் வளர்த்ததாலே,
உறவுச் சிக்கல்கள்;
பணியிடத்தில் குழப்பங்களை.

பணியில் தொடங்கி,
பாராளுமன்றம் வரை
வந்துவிட்டபின்
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல,
காவல் நிலையத்திலும்
தேவையில்லை,
மகளிர் மட்டும்.

கேள்வியும் பதிலும்-21:

விலங்குகளிடம் நீங்கள் பார்த்துப் பொறாமைப்படும் விஷயம்? (ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோவை)
இரண்டு. தங்களுக்க நேரக்கூடிய ஆபத்தைப் பற்றி அவை கவலையே படுவதில்லை. தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008 ("அரசு பதில்கள்").

ஹைகூ-8:

எறும்பின் மீது
விழுந்தும் நசுக்கவில்லை,
ஆலமரத்தின் நிழல்.

நன்றி: லலிதானந்த் & விகடன் தீபாவளி மலர் 2005.

இன்று ஒரு தகவல்-11: 'டிவி' அணைக்கும் வாரம்

'டிவி' பார்க்காதீர்கள்; அதற்குப் பதிலாக புத்தகம் படியுங்கள்; நன்றாகத் தூங்குங்கள்!' - இப்படி ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரம் அமேரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சராசரி அமெரிக்கர் வாரத்திற்கு முப்பத்திரண்டு மணி நேரம், வருடத்திற்கு ௧௭00 மணி நேரம் டிவி பார்க்கிறார். மேலும் அமெரிக்காவில் உள்ள நெல்சன் மண்டேலா மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்களின் ஆராய்ச்சி கூறும் தகவல்கள்:

டிவி பார்ப்பதால் நம் சாப்பிடும் பழக்கம் மாறுகிறது; தூக்கம் கெடுகிறது. இதனால், உடல் எடை போட்டு, சோர்வு முதல் எல்லாக் கோளாறுகளும் வருகிறது.

அதிகமாக டிவி பார்ப்பதைத் தடுக்க, அமெரிக்காவில் ஆண்டு தோறும் 'டிவி அணைக்கும் வாரத்தை' சில அமைப்பினர் கடைப்பிடிக்கின்றனர்.

நன்றி: தினமலர், வாரமலர், அக்டோபர் 5, 2008.