30 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-10: கைவண்ணம்-8




இன்றைய சிந்தனைக்கு-111:

நுனிப்புல்  மேய்ப்பவன் 
நுட்பம்  அறியான்  -  பெரியார்  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-14:

வானந்தம்  மண்ணினந்தம்  வைத்துவைத்துப்  பார்க்கஎனக்கு 
ஆனந்தம்  தந்த  அரசே  பராபரமே.  

   

யோக சித்தி-28: இயற்கை-4

ஓசைப்  படமால்  ஒருகோடி  அற்புதஞ்செய்
தேசுற்றால்  சித்தாடுந்  தாய். 

சித்து  விளையாடும்  இயற்கை  அன்னை  தேசு, அழகு, எழில், ஒளி, திறமை, பெருமை  பொருந்தியவள்.  அவளுடைய  மாயவித்தைகளின்  அற்புதங்களைச்  சொல்லிமுடியா!  அவள்  கோடிக்கணக்கான  அற்புதங்களைச்  செய்கிறாள்.  ஏதாவது சிறு  காரியம்  நிறைவேற்றினாலும்  தற்பெருமை பேசுகிறான் மனிதன்.  இயற்கை அன்னை  கோடிக்கணக்கான  அற்புதங்களை  ஓசைப்படாமல், தம்பட்டமில்லாமல்,  ஆரவாரமில்லாமற்  செய்கிறாள்.   

29 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-9: கைவண்ணம்-7




அன்பெனும்  ஆயுதத்தால்  உலகை  வென்ற  அன்னை  தெரசா.

இன்றைய சிந்தனைக்கு-110:

எக்காலத்திலும்  பகைமை  என்பது  பகையினால்  நீங்கிவிடுவதில்லை.  அன்பு  ஒன்றினாலேயே  நீங்கும்  - புத்தர்   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-13:

பார்த்தஇடம்  எல்லாம்  பரவெளியாய்த்  தோன்றஒரு 
வார்த்தை  சொல்லவந்த  மனுவே  பராபரமே.   

யோக சித்தி-27: இயற்கை-3

கதிராற்   கடன்முகந்து,  கார்மேக  நல்கி,
இதஞ்செய்  இயற்கை  என்றாய்!  

இயற்கை  எமது  அன்னை, இறைவன் தந்தை.  இயற்கை  உலகன்னை, அவன் உலகிற்கு  இதஞ்  செய்கிறாள்;  இனியன  செய்கிறாள், எப்படி?  உலகம்  வாழ  முதலில்  வேண்டுவது  மழை.  கதிரவன்  கிரணங்களாற் கடலை முகந்து,  மழை மேகத்தைத்  தருகிறாள் இயற்கை.  அந்தக்  கார்மேகம்  குளிர்காற்றுப்பட்டு  மழை  பொழிகிறது, மண் செழிக்கிறது, பயிர் தழைக்கிறது.  உயிர் பிழைக்கிறது.      

28 ஜூன், 2010

இன்றைய சிந்தனைக்கு-109:

துணிவு  இல்லையேல்  வாய்மை  இல்லை. 
வாய்மை  இல்லையேல்,  பிற  அறங்களும்  இல்லை.   
மகாத்மா  காந்தி   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-12:

வாக்காய்  மனதாய்  மனவாக்  கிறந்தவர்பால்  
தாக்காதே  தாக்குத்  தனியே  பராபரமே.   

யோக சித்தி-36: இயற்கை-2

பேசாது  பேசிப்  பெரு  நல்லறிவுணர்த்தும்  
ஆசான்  இயற்கையே  ஆம்.  

இயற்கை  நம்மைப்போல  வாய்திறந்து  பேசுவதில்லை.  ஆனால்  அதற்கென  ஒரு  மௌன  வாக்கு  உண்டு.  அதனால்  அது  தன்னுடன்  உள்ளுறவு  கொள்ளும்  புலவர்  உள்ளத்திற்  பேசும்.  அதன் பேச்சானது  எழுத்தில்  எழுதிய  நூல்களைவிடப்  பெரிய, நல்ல, உத்தமமான, உயர்வான  அறிவை  நமக்கு  உள்ளார  உணர்த்தும், விளக்கும்.   இவ்வாறு  சூக்சுமமாக  அறிவாளிக்கும்  ஆசிரியன்  இயற்கையொன்றே! 

27 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-8: கைவண்ணம்-6



வடிவமைப்புச்  சேவல் 

வடிவமைப்பைப்  பார்த்தால்  வாய்ப்பில்லை  சேவலுக்கு 
வடிவமில்லையேல்  வாய்ப்புண்டு  சேவலுக்கு.

இன்றைய சிந்தனைக்கு-108:

அன்பே  இல்லாத  மாளிகை  
மிருகங்கள்  வாழும்  இருண்ட  குகை  -  வி.ச.காண்டேகர்   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-11:

கண்ணே   கருத்தே   என்கற்பகமே  கண்நிறைந்த 
விண்ணே  ஆனந்த  வியப்பே  பராபரமே.  

யோக சித்தி-35: இயற்கை-1

இயற்கையின்  புத்தகமே  இன்பாக  நோக்கிற்
பயக்கும்  அறிவுப்  பழம். 

கான், மலை, ஆறு, கடல், வான், கதிர், மதி, மீன், காலை மாலை வனப்பு, தென்றல், மலர், உயிரினங்கள் இவையெல்லாம் நம்முன் விளங்கும் இயற்கையான  புத்தகங்கள்.  இவற்றுடன் மனமொன்றி உள்ளுறவு பேணவேண்டும்.  இவற்றின் புத்தகத்தை (புதிய உள்ளத்தை) களிப்புடன், பரவசமுடன் ஆராய்ந்து  பார்க்கவேண்டும்.  அவ்வாறு இயற்கையின் மாசற்ற உள்ளத்துடன் ஒன்றிய ஆராய்ச்சி, நமக்கு அறிவென்னும் கனியைத் தரும். 

26 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-7: கைவண்ணம்-5







அன்னம்  - முத்திரைகூட  சித்திரமாகலாம்!

எண்ணத்தில்  எழுந்த  அன்னம்  கை
வண்ணத்தில்   வந்ததென்ன!

இன்றைய சிந்தனைக்கு-107:

மோனம்   என்பது   ஞான   வரம்பு   - அவ்வையார் 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-10:

முத்தே  பவளமே  மொய்த்த  பசும்பொற்சுடரே  
சித்தே  என்னுள்ளத்  தெளிவே  பராபரமே 

யோக சித்தி-34: உலகநிலை-5

மாறித்  திரிந்து  வளர்  மண்ணுலகினிலே
மாறாத  ஒன்றை  மதி. 

இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் புதிய மாறுபாடடையும்.  ஒன்று மற்றொன்றாகத் திரியும்.  இதில் ஒவ்வொன்றும் அததன் பரிணாமத்திற்கேற்ப  மேன்மேலும் வளர்ச்சி பெறும்.  இவ்வாறான நிலையின்றித் திரியும் உலகில், ஒவ்வொன்றுள்ளும்  மாறாத, நிலைபெயராத, நித்தியமான ஒரு சுத்தான்ம வஸ்து உள்ளது.  அதையே பொருளென மதி.

பாகனேரி தேர்த்திருவிழா-2010:







































சென்ற ஆண்டு  பாகனேரி   தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டதுபோல்  இந்த ஆண்டும் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

எவ்வளவு கவலைகள், கஷ்டங்கள் இருந்தாலும்,  திருவிழா என்று வரும்போது பெரும்பாலானோர்  எல்லாவற்றையும் மறந்து,  உற்சாகமாகிவிடுகின்றனர்.  பிரிந்த உறவினர்கள் கூடுவது,  பழைய நண்பர்களைப் பார்ப்பது இப்படி  உறவுகளை-நட்புகளைப் புதுப்பித்துக்கொள்ள  ஒரு வாய்ப்பாக திருவிழா அமைகிறது.   


எங்கள் வீட்டைப்பொறுத்தவரை  என் பெண்ணும், மாப்பிள்ளையும், பையனும் இந்த ஆண்டு வந்து கலந்துகொள்ள முடிந்தது பெருமகிழ்ச்சியைத் தந்தது. 

காலையில்  குடும்பத்தினருடன்  அருள்மிகு  புல்வாய்  நாயகி  அம்மன்  கோவிலுக்கும், அருள்மிகு மகாமாரியம்மன் கோவிலுக்கும்  சென்று வழிபட்டோம்.  நிலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தோம். அதேபோல கோவிலிலும் அருள்மிகு புல்வாய் நாயகி அம்மன் திருவுருவச் சிலை அலங்கரிக்கப்பட்டு  மாலை தேரில் பவனிவர தயாராக இருப்பதைப் பார்த்தோம். 

மாலை ஆறு மணிக்கு மேல்  தேரோட்டம் பார்க்கச் சென்றோம்.  சுற்று வட்டாரத்திலுள்ள  ஊர் மக்கள் பெருந்திரளென  வந்து கொண்டதைக் காண முடிந்தது.  மேலும் பாகநேரியைச்  சொந்த ஊராகக் கொண்டு ஆனால் பிழைப்பின் நிமித்தம் வெளியூரில் வசிப்பவர்கள்கூட நிறையப் பேர்  தவறாது தேர்த்திருவிழாவிற்கு பாகனேரி வந்து தேரிழுப்பது, கோவிலுக்குச் சென்று வழிபடுவது என்று பழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அனைவருமே உற்சாகமாக, சந்தோஷமாக காணப்பட்டனர்.  அதிலும் குழந்தைகளுக்குச் சொல்லவே வேண்டாம்.  பலூன் வியாபாரிகள், பூ வியாபாரிகள்,  விளையாட்டுச் சாமான் மற்றும் பிளாஸ்டிக் சாமான்கள் விற்பனை ஸ்டால்கள், மிட்டாய்க் கடைகள் என்று நிறையபேர் திருவிழாக்களை நம்பி வாழ்வதைக் காணமுடிந்தது.  நினைத்துப் பார்க்கிறேன், இவர்கள் எப்படி ஊர் ஊராக திருவிழாக்களுக்குச் செல்வது, வியாபாரம் செய்வது என்று தங்கள் வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று.  நம் பிழைப்பு  எவ்வளவோ  தேவலை  என்று  எண்ணிக்கொண்டேன்.

இரண்டு தேர்கள் மொத்தம்.  ஒன்று  சிறுவர்களுக்கானது.  முழுக்க முழுக்க சிறுவர்களால் இழுக்கப்படுவது.  பெரிய தேர் மற்ற அனைவருக்கும்.  தேர்களின் அலங்காரம் கலை நுட்பத்துடன் இருப்பதை அருகில் சென்று பார்த்தால் தெரியும் (படங்கள்). 

நேற்றைய பொழுது இப்படியாக உறவினர்களுடன் இனிமையாகக் கழிந்தது.  

25 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-6: கைவண்ணம்-4:



அழகான மயிலிது! அதன் வாயில்  அரவமோ  ஆடுது!!
(ஒரு பழைய திருமண அழைப்பிதழ் கவரின் மேல் ஒரு சில நொடிகளில் ஒரு படத்தை  உருவாக்கிவிட்டார்!) 

இன்றைய சிந்தனைக்கு-106:

சத்தியம்  தனியாகச்  செல்லும்.  பொய்க்குத்தான்  துணை  வேண்டும்  - எபிக்டேடஸ்  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-9:

திக்கொடு  கீழ்மேலும்  திருவருளாம்  பொற்பறிந்தோர் 
கைக்குள்வளர்  நெல்லிக்கனியே  பராபரமே  

யோக சித்தி-33: உலகநிலை-4:

ஆலுக்கும்  பூசணிக்கும்  ஆய்ந்து  கனிகொடுத்த
ஞாலத்தான்  வைப்பே  நலம். 

இறைவன்  ஒவ்வொன்றிற்கும்  தக்க  படியளக்கிறான்.  ஆலமரத்திற்கும்  பூசநிக்கொடிக்கும்  கனியின்  பருமனை ஆராய்ந்து  அளந்து கொடுத்திருக்கின்றான்.  அவன்  உலகுடையான்;  பாரிறைவன்.  அவன்  வைத்த  பான்மையே  அதற்கு  நலமாகும்.  

23 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-4: கைவண்ணம்-2: பாலைவனக்கப்பல்






பாலைவனக் கப்பலிது
ஆளையேற்றிச் செல்லுது
சாலையோரம்  செல்லும்போது
மாலையாகிப்  போனது.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-8:

எத்திக்கும்   தானாகிஎன்  இதயத்தே   ஊறித்   
தித்திக்கும்  ஆனந்தத்  தேனே  பராபரமே. 

யோக சித்தி-32: உலகநிலை-3

இருப்பது  ஒருபொருளே;  எல்லாம்  அதுவே:
பிரிப்பதுபொய்  மாயப்  பிணி.  

உள்ளதெல்லாம் ஒரு  பரமாத்மப் பொருளே.  அதுவே  தனது  அருளாற்றளால்  எல்லாமாய்  விரிந்துள்ளது.  இறைவனிடமிருந்து  உலகைப்  பிரித்து  நோக்குவது  பொய்யாகிய  மனமயக்க  நோய்தான்.   

இன்றைய சிந்தனைக்கு-104:

மீதூண்   விரும்பேல்  - அவ்வையார் 

21 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-3: கைவண்ணம் -1


மேயாக்   குதிரை   இது   விரைந்து 
பாயாக்  குதிரை  இது  
நாட்டினில்  வாழும்  இது  இங்கு  
கோட்டினில்  வாழுது   


தாயுமானவரின் பராபரக்கண்ணி-7:

உரையிறந்த அன்பர்  உளத்தோங்கொளியாய்  ஓங்கிக்  
கரையிறந்த  இன்பக்  கடலே  பராபரமே. 

யோக சித்தி-31: உலக நிலை-2

 வகுக்கு  மனமயக்கால்  வையத்தைக்  காணேல் 
உகக்கும்  ஒளியரிவால்  உன்.

தனியகந்தை கொண்டு  பிரித்தே  நோக்கும்  மனமாயத்தால்  உலகைக் காணாதே.  'உலகம் திருவருலாடல்' எனக்கண்டு மகிழும்  ஒள்ளிய  அருளரிவால்  அதை  நினை.   

19 ஜூன், 2010

இன்றைய சிந்தனைக்கு-103:

அன்புதான்  வாழ்வின்  ஆதார  சுருதி.  

கேள்வியும் பதிலும்-30:

உண்மையைப்  பேசும்  அரசியல்  பேச்சாளர்கள்  யார்?  (தி.விஜயலட்சுமி, பெரம்பூர்)


அரசியல் கட்சியில் சேர்ந்த பிறகு உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பவர்கள்தானே  இன்று  நூறு சதவிகிதம் உள்ளனர்.  கட்சியில் சேர்ந்து, மேடை ஏறிய பின், உண்மை எங்கிருந்து வரும்?  (அந்துமணி)

நன்றி:  அந்துமணி கேள்வி-பதில், தினமலர் வாரமலர்,  மே 9 , 2010 .  

அலெக்ஸ் பக்கம்-2: கவிதை-1

செல்லுக  செல்லிடத்துச்  செல்லுடனே  செல்லாவிடில் 
சொல்லுதற்  யார்க்கும்  அரிது.  

அலெக்ஸ் பக்கம்-1: அறிமுகம்

அலெக்ஸ் எனதருமை நண்பர்களில் ஒருவர்.  என் ஒத்த வயதினர்.  பல்துறை வல்லுநர் - ஓவியம், சிற்பம், இசை, கவிதை, ஹோமியோபதி  என்று பல துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவர்.  பழகுதற்கு இனியவர்.  நிறைய நண்பர்களைப் பெற்றவர்.  பரந்த மனம் கொண்டவர். தொண்டுள்ளம் கொண்டவர். இப்படி அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இவ்வலைப்பூவில்  தன் திறமையைக் காட்ட இசைந்துள்ளார்.   தொடர்ந்து எழுதுவார்.

நன்றி, அலெக்ஸ்!




தாயுமானவரின் பராபரக்கண்ணி-6:

ஆரறிவார்   என்ன  அனந்தமறை  ஓலமிடும்  
பேரறிவே  இன்பப்  பெருக்கே  பராபரமே.   

யோக சித்தி-30: உலக நிலை-1

உண்டில்லை  என்றோயாச்  சண்டையேன்?  உள்ளவரை
பண்டுலகிற் பாங்குற்  றிரு.  

உலகம் உண்டு, இல்லை என்று ஓயாது வாதம் புரிந்து காலத்தை வீணாக்குவதேன்?  பழமையான உலகத்தில் உயிர்கொண்டு உள்ளமட்டும் நல்லொழுக்கமும்  நிறைமுறையான  வாழ்வும் கொண்டிரு.   

17 ஜூன், 2010

பயணங்கள்-13: திருப்போரூர்

திருப்போரூர்   பேருந்து   நிலையம் 



உடற்பயிற்சி செய்யும் நெல்லையப்பன்

நெல்லையப்பன் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி!

அருள்மிகு கந்தசாமி கோவில் திருக்குளமும், அதன் நடுவில் மண்டபமும்

அருள்மிகு கந்தசாமி கோவில் திருக்குளமும், அதன் மண்டபமும் (இன்னொரு கோணத்தில்)



குளத்தங்கரை  விநாயகர்

அருள்மிகு கந்தசாமி கோவில் நுழைவாயில்

அருள்மிகு கந்தசாமி கோவிலினுள் நுழைந்ததும் அங்கே சிதம்பர சாமிகளுக்கு சிறிய ஆலயம்

அருள்மிகு கந்தசாமி கோவில் ஸ்தல விருக்ஷம் வன்னி மரமும், அதன் சிறப்பைப் பற்றிய விளக்கமும்

சிதம்பர சுவாமிகளின் திரு உருவப்படம் (கோவிலுக்கு வெளியே)

அருள்மிகு கந்தசாமி கோவில் தேர்

அருள்மிகு கந்தசாமி கோவில் அருகே சான்றோர் தெரு - என்னவொரு அற்புதமான பெயர்!

பிரணவமலை முன்வாயில்

பிரணவமலை வாயிலில் நினைவுச் சின்னம்

பிரணவமலை நுழைவாயில் மண்டபம்

அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை

மலைப்பாதையில் நம் சிந்தனைக்கு-1

மலைப்பாதையில் நம் சிந்தனைக்கு-2

அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறு சிறு ஆலயங்கள்

நெல்லையப்பன் மலைப்பாதையில் எனக்குமுன் படியேறுகிறான்

அருள்மிகு கைலாசநாதர்-பாலாம்பிகை ஆலயம்





அருள்மிகு கைலாசநாதர் ஆலயப் பிரகாரத்தில் சிதம்பர சுவாமிகளின் திருவுருவப்படம்

ஸ்ரீ சிதம்பர சுவாமிகளின் சமாதி

அருள்மிகு கைலாசநாதர் கோவிலின் பின்புறம் பக்தர் ஒருவர் கட்டிய வீடு

மலைமேல் அருள்மிகு கந்தசாமியின் வேல் வடிவம்

பிரணவமலையிலிருந்து கீழே ஒரு தோற்றம்
பிரணவ மலையிலிருந்து அருள்மிகு கந்தசாமி கோவிலின் தோற்றம் 

என்னருமை நெல்லையப்பன் திருப்போரூர் வந்த பிறகு பலமுறை அங்கு சென்று அவனோடிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அதுமட்டுமல்ல, அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.  அந்த ஊரின் உயிர்நாடியே ஊரின் நடுவேயுள்ள  அருள்மிகு கந்தசாமி கோவிலும் அதன் தெப்பக்குளமும்தான்.  OMR என்று அனைவரும் குறிப்பிடும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத ஒரு சிற்றூர்.  அங்கிருந்து சென்னை 40 கிலோமீட்டர். மாமல்லபுரம் 16 கிலோமீட்டர்.  செங்கல்பட்டு 25 கிலோமீட்டர்.  திருக்கழுக்குன்றம் 18 கி.மீ.

பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெறும் பனங்காடாக இருந்த இடத்தில் ஒரு பெரிய கோவிலை, அருள்மிகு கந்தசாமி கோவிலையும், அருகிலிருந்த சிறு ஓடையை ஒரு பெரிய திருக்குளமாகவும் உருவாக்கியவர் சிதம்பர சுவாமிகள் என்ற ஒரு தவ முனிவர்.  அதுமட்டுமல்ல சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் வழங்கப்படும்  சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர்-பாலாம்பிகை கோவிலை வடிவமைத்ததும் அவர்தான்.  இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கப்பாதை அமைத்து அதில் சமாதியடைந்ததாகச் சொல்லப்படுகிறது.  அந்த வாயிலைச் சுற்றி சங்கிலி வெளி அமைக்கப்பட்டுள்ளது.  அருகே அவரது திருவுருவப்படம்.

பிரணவமலையில் நான் பார்த்திராத-அதுவரை கேள்விப்பட்டிராத ஒன்றைக் கண்டேன்.  கோவிலின் பின்புறம் இடிக்கப்பட்ட யாகசாலையின் செங்கல்கள் நிறையக் கிடக்கின்றன.  அங்கு வரும் பக்தர்கள் அந்த செங்கல்களை தனியே ஒரு இடத்தில் அடுக்கி, தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர்.    அந்த வேண்டுதல் நிறைவேறும் இன்று பலருக்கு நம்பிக்கை இருப்பதை அங்கிருந்த நிறைய செங்கல் அடுக்குகள் (படம்) பறைசாற்றின.  

சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் சந்நிதித் திருமுறை என்ற பெயரில் 726 பாடல்கள் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்து  ஒரு  பாடல்.

அன்னம் அளிக்குமூர் அன்டினரைக்  காக்குமூர் 
சொண்ண  மழைபோற்  சொரிய்மூர்  -  உண்ணினர்க்குத்
தீதுபிணி  தீர்க்குமூர்  செவ்வேள்  இருக்குமூர்
ஓது  திருப்போரூர்  எம்மூர்.       

அருள்மிகு கந்தசாமி கோவில் முருகப்பெருமானின் திருக்கோவில்.  ஒருநாள் மாலை அங்கு சென்று வழிபட்டேன். அந்தக்  கோவிலின்  ஸ்தல  விருக்ஷம்  வன்னி  மரம்.  வன்னி மரத்தின் மேன்மைகள் பற்றிய ஒரு விவரப் பலகை பிரகாரத்தில் இருந்தது (படம்). ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு ஸ்தல விருக்ஷம்.  ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பிராணி வாகனம்.  முருகனுக்கு மயில், கணபதிக்கு சுண்டெலி என்று.  நம் முன்னோர்கள் எல்லா உயிர்களையும் - மரங்கள், பிராணிகள் எல்லாவற்றையும் - வணங்க சூக்சுமமாக  நமக்குக் கற்பித்திருக்கிறார்கள். நாம் இயற்கையின் ஒரு அம்சம்.  மரம், மனிதன், பிராணி - எல்லாவற்றையும் ஒருமைபடுத்தி, அத்வைதம் (Advaita - Non-dualism),  எல்லாம் ஒன்றே, ஒன்றின் பல அம்சங்கள்  என்ற மேன்மையான தத்துவத்தை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.   நினைக்கவே பெருமையாக இருக்கிறது. வழிபட்டுவிட்டு வெளியே வரும்போது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.

கோவில் கடைகளில் பொரி பாக்கெட் விற்கிறார்கள்.  அதை வாங்கி குளத்திலுள்ள மீன்களுக்குப் போடுகிறார்கள்.  கூட்டம் கோட்டமாக மீன்கள் வந்து அவற்றைத் தின்பதை பார்த்து ரசிக்கிறார்கள்.

நெல்லையப்பனுடன் அதிகாலையிலும், பின்மாலைப்பொழுதிலும் திருக்குளத்தைச் சுற்றி வருவது இனிய, சுகமான அனுபவம்.   அதுபோல் அதிகாலையில் பிரணவமலை சென்று அந்த எளிமையான, அமைதியான, யாருமே இல்லாத, ரம்மியமான  சூழலில் இயற்கையோடு லயிப்பது ஒரு அற்புதமான அனுபவம்.

ஒருநாள் அதிகாலை நானும் நெல்லையப்பனும் நடைபழகும்போது, எதிரே ஒரு முதியவர் ஆடுகள், நாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றிற்கு உணவளித்துக் கொண்டே வந்தார். அவர் பின்னே அந்தப் பிராணிகளும் நெருக்கமாகச் சென்றன.  நெல்லையப்பனுக்கு அவர் ஏற்கனவே பரிச்சயமாகி இருந்தார்.  அவரை வணங்கிவிட்டு, என்னை அறிமுகப்படுத்தினான்.  நானும் அவரை வணங்கினேன்.  அவர் வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலாரைப் போற்றுபவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்ற நெறிப்படி வாழ்பவர்.  என்னை அவர் கேட்டார்: "ஐயா, நீங்கள் புலால் உண்ணுவீர்களா?"  என்னால் அவருக்கு நேரான பதில் சொல்லமுடியவில்லை.  சைவக் குலத்தில் பிறந்த நான், நண்பர்கள், சந்தர்ப்பங்கள் காரணமாக அசைவ உணவை எப்போதாவது உண்ணுவேன்.  நிறைய முறை அசைவம் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுப்பேன்; பின்னர் சில காலம் கழித்து ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறழ்வேன்.  இம்முறை, அந்த நிமிடம் முதல் அசைவம் உண்பதில்லை, முட்டைகூட சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்தேன். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் பிறழாமல் இருப்பேன் என்று உறுதியுடன் நம்புகிறேன்.  நெல்லையப்பன் ஏற்கனவே அவரைப் பார்த்தபின் அந்த முடிவில் உறுதியாக இருந்தான், பின்பற்றி வருகிறான்.
 
நெல்லையப்பன் ஒவ்வொரு முறையும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் செல்வான்.  மூன்று அல்லது நான்கு சிறந்த எளிமையான உணவகங்கள்.  சுவையான உணவு, நியாயமான விலையில்.  (சென்னையில் ஒரு உணவு விடுதியில் ஒரு தோசைக்கு முப்பத்து இரண்டு ரூபாய் பில்லைப்பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது.  என்ன பாடாவதி எண்ணெயில் சுட்டதோ, அன்று முழுவதும் வேறு எதுவுமே என்னால் சாப்பிடமுடியவில்லை; உணவைப் பார்த்தாலே வெறுப்பு).  போஜனப்பிரியனான என்னால் அங்கு சாப்பிட்ட கல்தொசையை மறக்க முடியாது.  அதுபோல் வேறெங்கும் உண்டதில்லை.  (ஒரு காலத்தில் என்னுடைய புனைப்பெயர்களில் ஒன்று: "போ.ஜனப்பிரியன்"  என்பது).

தாம்பரம், கோயம்பேடு, பிராட்வே, சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய இடங்களிலிருந்து திருப்போரூருக்கு நேரடி பேருந்து சேவை உள்ளது.  கிழக்கு தாம்பரத்திலிருந்து நான் சென்றதால் சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து நேரடியாக திருப்போரூருக்கோ அல்லது கேளம்பாக்கம் சென்று அங்கிருந்து மாமல்லபுரம் பேருந்திலோ அல்லது வேனிலோ (தலைக்கு ஐந்து ரூபாய்) திருப்போரூர் சென்றுவிடலாம்.  ஒரு முறை ஆசைக்காக கொளுத்தும் வெயிலில்  குளிரூட்டப்பட்ட பேருந்தில் கோயம்பேட்டிலிருந்து கேளம்பாக்கம் சென்றேன். (கட்டணம் ரூபாய் முப்பத்து எட்டு.  மொத்தமே பத்துப் பதினைந்து பேருடன் மிகச் சுகமான, மறக்க இயலாத  பயணம்).  அதுபோல  சோளிங்கநல்லூரிலிருந்தும்  இரண்டு மூன்று முறை குளிரூட்டப்பட்ட பேருந்தில் கேளம்பாக்கம் வரை பயணம் செய்தேன் (கட்டணம் ரூபாய் இருபத்து மூன்று). சோளிங்கநல்லூர் சிக்னலில் நிற்கும்போது பத்து நிமிடத்தில் கேளம்பாக்கத்திற்கு ஐந்து பேருந்து செல்வதைக் கண்டிருக்கிறேன்.  அவ்வளவு பேருந்து வசதி.

திருப்போரூரிலிருந்து குன்றத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு  நேரடி பேருந்து வசதி உள்ளது.  

திருப்போரூரில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்திருக்கிறேன். திருப்போரூரிளிருந்து மாமல்லபுரம், சிங்கப்பெருமாள் கோவில், சோளிங்கநல்லூர் அருள்மிகு மகா பிரத்தியங்கரா தேவி கோவில் சென்று வந்தேன். மாமல்லபுரம் சென்று வந்ததைப்பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.  மற்றவற்றைப் பற்றி தனியே எழுதுகிறேன்.  அடுத்து எப்போது திருப்போரூர் செல்லலாம் என்று எதிர்நோக்கியிருக்கிறேன்.